Friday, November 11, 2011

மாண்டவி

இந்த கதை அதீதம் இதழின் september-I இதழில் வெளி வந்துள்ளது.

மாண்டவி

விடியற்காலை ஐந்து மணி. ஒரு பெண் தன் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். உள்ளே குழந்தை அழும் சத்தம்.

"அடியே உன் பொண்ணு ஊரையே எழுப்புவா போல. சேவலுக்கு போட்டியா கத்தறா. வந்து பாத்து தொலை", அதிகாரமாய் கேட்டது ஒரு குரல். விடு விடுவென உள்ளே சென்று குழந்தையை தோளில் போட்டு கொஞ்சி தூங்க வைத்தாள்.


மாண்டவிக்கு இது இரண்டாவது பெண் குழந்தை. முதல் பெண்ணிற்கு வரும் ஐப்பசியில் 4 அகவை ஆகிறது. இரண்டாவது குழந்தைக்கு கடந்த வாரம் தான் காது குத்தி ஒரு வயது முடிந்ததற்கு சடங்கெல்லாம் செய்யப்பட்டது. அவள் இப்படி காலையில் அழுவது கிட்டத்தட்ட வாடிக்கை ஆகிவிட்டது. "ஐந்து வருடம் சாதகம் செய்தால் கூட இவளைப்போல் பைரவி ராகத்தில் அழ முடியாது என்ன சாரீரம் எம் எல் வி அம்மா மாதிரி", சலித்துக்கொண்டே தன் மகளின் அழுகை சங்கீதத்தை ரசித்தால் மாண்டவி.

குழந்தையை பார்த்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் அதிகாரக்குரல். "பைத்தியமே, இன்னிக்கி வெள்ளிகிழமை, காவி போடணும்னு தெரியாது? உன்ன சொல்லக்கூடாது, வளத்தா பாரு என் நாத்தனார்காரி அவளை சொல்லணும் ச.. எல்லாம் நான் சொல்லணும். உதடு தேயரத்துக்கு உள்ளங்கால் தேயலாம் நானே போடறேன்"

மனதிற்குள் கோவம் பொத்துக்கொண்டு வந்தது மாண்டவிக்கு. "குழந்தை அழுதுதுனு தானே பாதில வந்தேன். நா உடனே வரலைன்னா அதுக்கு ஒரு பேச்சு பேசுவா. என் ஒர்படி இன்னமும் தூங்கறா. அவளை ஒன்னும் கேக்கறதில்லை. என் முகத்துல இளிச்ச வாய்னு எழுதி ஒத்திருக்கு போல. இத்தனைக்கும் அவ வேற வீட்லேந்து வந்த பொண்ணு. நான் இவாளோட சொந்த அண்ணா பொண்ணு", மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.


ஆறு மணி ஆயிற்று. "சீக்கரம் காபி கொடுடி மாண்டவி. எனக்கு 6 மணிக்கு காபி வேணும்னு தெரியுமோன்னோ. என்ன பண்ணின்டுருக்க?", மீண்டும் அதிகாரமான குரல்.

"ஏண்டி கோசலே, நீயே போய் போட்டுக்கறது காபி வேணும்னா. எதுக்கு அவளை ஏவரே", என்று மாண்டவியின் மாமனார் தசரதன் பரிந்து பேசினார்.

"இந்தாங்கோ காபி", என்ற இரு வார்த்தையுடன் ஒன்றும் பேசாமல் நகர்ந்து சென்றாள் மாண்டவி. "இந்த மைதிலி என்ன பொடி போட்டு வெச்சுருக்கான்னு தெரில. நன்னா புக்காத்துலாயும் சொகமா இருக்கா. என் அத்தை என்ன மட்டும் தான் வேல வாங்கறா". நாள் முழுவதும் இது போன்ற அதிகார ஏவல்கள், வீட்டு சமையல், குழந்தையை பள்ளிக்கு அனுப்புதல், கைக்குழந்தையை பார்த்துக்கொள்ளுதல் என பம்பாரமாய் இரவு வரை சுழன்றாள் மாண்டவி.


இரவு உணவுக்கு பின்னர், தசரதன் தன் மகன் பரத்திடம், "இதோ பாருடா உன் பொண்டாட்டிய நீதான் ஒழுங்கா பாத்துக்கணும். ராம பாரு, மைதிலிய ஒரு வேலை செய்ய விடுறதில்ல. உன் பொண்டாட்டிய மட்டும் தான் கோசலை வேல வாங்குறா. நீ தனி குடித்தனம் போனா தான் சரிப்படும் ஆமா"

பாத்திரம் தேய்த்தல், சமயற்கட்டு அலம்புதல் என்று அடுத்த சுற்று வேலை முடித்து மாண்டவி படுக்கையறைக்கு செல்லும்போது மணி 11.

"மாண்டு என்னடி தினம் 11 மணிக்கு தூங்கி 5 கு எந்திரிச்சா உடம்புக்கு என்னடி ஆறது, நான் வேணா அம்மாட்ட பேசி தனிக்குடித்தனம் ஏற்பாடு பண்ணட்டுமா?" என்றான் பரத்.

"நீங்க மட்டும் வேணா தனிக்குடித்தனம் போங்க. நான் வரதா இல்ல அத்தைய விட்டுட்டு", பளிச்சென்று சொன்னாள் மாண்டவி.

"லூசாடி நீ, எங்கம்மா இப்படி வேலை வாங்கியும் அவாளோடதான் இருப்பேங்கற?"

"உங்களுக்கு வெளிய இருந்து பாத்தா இப்படி தான் தெரியும். எங்கத்தைக்கு என்ன எவ்வளவு பிடிக்கும்ங்கறது எனக்கு தான் தெரியும். ஒரு நாள் கூட என் காபி குடிக்காம அவங்களால இருக்க முடியாது. ஒரு நாள் மைதிலி காபி கொடுத்தா. அதை இப்போ வேண்டாம்னு நாசுக்கா சொல்லி அனுப்பிட்டு என்கிட்டேந்து காபி வாங்கி குடிச்சா. வரலக்ஷ்மி நோம்புக்கு நா பண்ணின வடை, மோதகம் அருமையா இருக்குன்னு தெரு பூரா தம்பட்டம் அடிச்சா. இத்தனைக்கும் எனக்கு கூடவே இருந்து சொல்லிகுடுத்ததெல்லாம் அத்தை தான். மதியம் என் மடிலதான் படுத்துண்டு தூங்குவா. தினமும் சாயங்காலம் என்ன பாட சொல்லி கேப்பா. இவ்வளவு ஏன், போன வாரம் கீழ விழுந்துட்டேன் சமயகட்டுல. அன்னிக்கி மத்தியானம் பூரா எனக்கு கால் அமுக்கி விட்டா. காலேல போயிட்டு சாயங்காலம் வர உங்களுக்கு எங்க தெரியப்போகுது எங்க உறவோட அருமை".

அறைக்கு வெளியே கோசலை தன் கணவரிடம், "நான் சொன்னேனே கேட்டேளா என் அண்ணா பொண்ணு ராமாயணத்து மாண்டவி மாதிரியேன்னு. கைகேயி சொல்லாமலே குறிப்பறிந்து நடந்து கொண்டவள் அந்த மாண்டவி. என் மாண்டவியும் அப்படித்தான். அவ சொன்னா மாதிரி உங்களுக்கு எங்க தெரியப்போகுது எங்க அருமை", என்றாள் விழியோரம் உணர்ச்சி பெருக்கால் கண்ணீருடன்.

Sunday, August 21, 2011

பொம்மை மனிதர்கள்

இந்த கதை அதீதம் இதழின் ஆகஸ்ட்-I இதழில் வெளி வந்துள்ளது. கதையா அதீதத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்.

பொம்மை மனிதர்கள்:

அந்த வீடு சோகமயமாய் தெரிந்தது. ஒரு 50 வயது மதிக்கத்தக்க மனிதர் கண்களில் நீர் கசிய "ஏட்டி ஜென்மம் இதிகா ஓ ராம" (என்ன ஜென்மம் இது ராம?) என்ற தியாகராஜரின் வராளி ராக கீர்த்தனை கேட்டு கொண்டு இருந்தார். இந்த பாடலை கேட்பவர் கண்கள் நீர் சொரிவது சகஜம் தான் என்றாலும், இவர் கண்ணீரில் ஒரு பெரிய சோகம், இழப்பு தெளிவாய் தெரிந்தது.


"நான் ஆத்துக்குள்ள வரலாமா?", வாசலில் ஒரு குரல் சன்னமாய் ஒலித்தது. சத்தம் கேட்டு சுந்தரம் அய்யர் வாசல் பக்கம் திரும்பினார். திரும்பின மாத்திரத்தில் "மரகதம் ஒரு பீடை வந்துருக்கு, வந்து அடிச்சு விரட்டுடி, எனக்கு நெஞ்சு வெடிச்சுரும் போல இருக்குடி. நா யாருக்கு என்ன பாவம்டி பண்ணினேன், என்னை அந்த ராமன் இப்படி பொம்மையா ஆட்டி வெக்கறானேடி", என்று கதறினார்.


மரகதம் அழுது சிவந்த விழிகளுடன் சமையற்கட்டிலிருந்து வெளியே வந்து , "வாடிம்மா ஸ்டெல்லா என் புள்ளைய கொண்டு போனது பத்தாதா இப்போ நாங்க இருக்கோமா இல்ல என் மகராசன் ஸ்ரீராமன் போன எடத்துக்கே போய்ட்டோமானு பாக்க வந்தியாடி", பேசும்போது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவள் விழிகளில்.


சுந்தரம் ஐயர், மரகதத்தின் செல்வ புதல்வன், சீமந்த புத்திரன், கருவேப்பிலை கொத்து போல் இருந்த ஒற்றை மகன் ஸ்ரீராமன். தவமிருந்து கிடைத்த ராமனின் பிரசாதம் இந்த ஸ்ரீராமன் என்றே இருவரும் நினைத்து அவனை வளர்த்தனர். அவன் இறந்த மூன்றாம் நாள் இந்த ஸ்டெல்லா மறுபடி வந்து இருக்கிறாள். ஸ்ரீராமன் இறந்த அன்றுதான் ஸ்டெல்லாவை முதல் முறையாய் சுந்தரமும், மரகதமும் சந்தித்தனர். இது இரண்டாம் சந்திப்பு.


ஸ்டெல்லா பேசலானாள், "அம்மா, உங்க மகனை நான் உங்களை விட அதிகமா நேசித்தேன். அவனுக்காக மாமிசம், முட்டை சாப்பிடுவதை கூட நிறுத்தினேன். அவனுக்காக மெழுகாய் காலம் முழுக்க உருகத் தயாராய் இருந்தேன். எனக்கு பிடித்த ஒருத்தரோட இறப்புக்கு என்னையே காரணம் சொல்லுவது சரி இல்லை. யோசிச்சு பாருங்க என்னாலயா அவருக்கு இப்படி ஆச்சு?"


சுந்தரம் ஐயரின் மனதிற்குள் காலம் மூன்று நாள் பின்னோக்கி ஓடியது. சுந்தரம் ஐயர் காபி குடித்துக்கொண்டு இருந்தார். ஸ்ரீராம், பெயருக்கேற்றார் போல முழு மதி போன்ற முகம், அப்பா முன் வந்து, "அப்பா உங்கள்ட ஒன்னு பேசணும்பா." சுந்தரம் அய்யர், பரவசமிகுந்த புன்முறுவல் பூத்த முகத்துடன், "என்னடாப்பா ஸ்ரீராமா சொல்லு", என்றார் வாஞ்சையுடன்.


"அப்பா நான் ஒரு பெண்ணை விரும்பறேன் பா. அவ பேரு ஸ்டெல்லா. தங்கமான பொண்ணு பா. நான்னா அவளக்கு உயிர். ஒருதரம் ஆத்துக்கு கூட்டிண்டு வர்றேன்பா, நீயும் அம்மாவும் பாத்துட்டு சொல்லுங்கோ", பயத்தில் கைகள் நடுங்க, நாக்கு பிறள ஒருவழியாக சொல்லி முடித்தான் ஸ்ரீராம்.


"ஏண்டா நாங்க பாக்குறதுக்கு என்ன இருக்கு? நீ பேருக்கேத்த மாதிரி ஒரு ஜானகியா கூட்டிண்டு வந்தா நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன், இப்படி ஏதோ கழிசடைய போய் காதலிக்கறதா சொல்றியே. இது நன்னாவாட இருக்கு? நோக்கு ஏண்டா இப்படி புத்தி போறது? ஏண்டி மரகதம் கேட்டியாடி நம்ம புள்ளயாண்டான் சொன்னத?"


"அப்பா பேருல என்னப்பா இருக்கு. பேரு வேணும்னா ஜானகினு மாத்திக்கலாம். பிறப்பால எல்லா மனிதர்களும் ஒன்னுன்னு நீங்கதானேப்பா சொல்லுவேள்?" எதிர் கேள்வி கேட்டான் ஸ்ரீராம்.


பேச எத்தனித்த சுந்தரத்தை, மரகதம், "நீங்க சித்த இருங்கோ. பிறப்பால எல்லாரும் ஒன்னு தான்டா, வித்தியாசம் இல்ல. ஆனா வளர்ப்பு? அவ ஏதோ ஒரு கிரகம் பிடிச்ச இடத்துல வளர்ந்தவ. கண்டதையும் திங்கறவ. எப்படிடா அவள சமயக்கட்டுக்குள்ள விடறது? இதெல்லாம் புத்தகங்கள்லையும், நாடகங்கள்லையும், சினிமாவிலையும் வேணா நன்னா இருக்கும். நம்மாத்துக்கு தோதுபடாது டா. நீ விட்டுரு இதுக்கு மேல இது வேண்டாம்".


சுந்தரம் ஐயர் மிகவும் சாது ஆனவர். அதிர்ந்து பேச தெரியாதவர். மரகதம் அழுத்தம் திருத்தமாய் பேசக்கூடியவள், திறமைசாலி. அந்த வீட்டு பொறுப்புகளை அழகாகவும் பக்குவமாயும் நடத்தி வருபவள். அம்மா என்றால் ஸ்ரீராமுக்கு பயம் அதிகம். அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சு வீட்டில் இல்லை என்பது அவனுக்கு நன்றாய் தெரியும். ஸ்ரீராம் கோபத்துடன், "நான் வெளிய போறேன். இனிமேல் உங்களிடம் பேச மாட்டேன்", என்று கூறிவிட்டு வேகமாய் வெளியே வந்து தனது அபாசீயை முறுக்கினான். இதுவே சுந்தரத்திடமும், மரகத்திடமும், அவன் பேசிய கடைசி வார்த்தை.


உயிருடன் சென்றவன், உயிரற்ற உடலாய், அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டில் கிடத்தப்பட்டு இருந்தான். மரணம் எல்லாரையும் உலுக்கிப்போடும் ஒரு விஷயம். சிறு வயது மரணம் என்றால் கேட்கவே வேண்டாம். 25 வயது ஸ்ரீராமின் தேகம் பார்த்து கதறி அழுது கொண்டிருந்தார்கள் மரகதமும், சுந்தரமும். அப்போது ஸ்டெல்லா வந்து அறிமுகப்படுத்திக்கொண்டாள். சுந்தரம் அவளை திட்டி வெளியே அனுப்பி விட்டார்.


சுந்தரம் நிகழ்காலத்துக்கு திரும்பி வந்தார். "என் புள்ளயே போய்ட்டான், இப்போ எதுக்கு வந்தே?" என்று ஸ்டெல்லாவிடம் வினவினார்.


ஸ்டெல்லா பேசத் துவங்கினாள். "நான் நீங்க அன்னிக்கி விரட்டினப்பவே, ஸ்ரீராம் போனா மாதிரி, ஏதானும் ஒரு லாரில அடிப்பட்டு போய்டலாம்னு நெனச்சேன். கண்ணை மூடிண்டு மகாபலிபுரம் ரோட்ல என்னோட வண்டில போனேன். போற வழில மயங்கி விழுந்துட்டேன். அந்த வழியா போன காதலர்கள் ரெண்டு பேரு என்னை ஆஸ்பத்திரில சேத்து விட்டா. டாக்டர் நான் இரண்டு மாசம் கர்பம்னு சொன்னார். அதுக்கு காரணம் நம்ம ஸ்ரீராம் தான். எங்க வீட்டுல கருவை கலைக்க சொன்னா. நான் முடியாதுன்னு சொல்லிட்டு நம்மாத்துக்கு கிளம்பி வந்துட்டேன். நான் உள்ள வரலாமா, நேக்கு ஒரு டம்ளர் தீர்த்தம் தரேளா நாக்கு தவிக்கறது" என்று துக்கம், சந்தோஷம், ஏக்கம் என அனைத்து உணர்ச்சிகளும் கலந்த கலவையாய் பேசி முடித்தாள்.


நாட்கள் உருண்டோடின. இரண்டு வருடங்களுக்கு பிறகு.





ஏட்டி ஜென்மமிதிகா, என்று பாடிக்கொண்டே சமைத்துக் கொண்டிருந்தாள் ஜானகி. ஸ்ரீராமுடன் சுந்தரமும், மரகதமும் விளையாடிக்கொண்டு இருந்தனர். "ஜானகி சித்த இங்க வாம்மா, நம்ம ஸ்ரீராம்கு பசிக்கறது, ரசம் சாதம் பிசஞ்சு எடுத்துண்டு வா", என்றாள் தனது அழுத்தமான குரலில்.

குழந்தை ஸ்ரீராம் தனது எலி பொம்மைக்கு சாவி கொடுக்க, எலி பொம்மையுடன், சுந்தரம், மரகதம் மற்றும் ஜானகியும் சேர்ந்து ஆடினர் பொம்மைகளாய். அந்தக் குழந்தை சாவி கொடுத்து இயக்கியது பொம்மையை மட்டுமல்ல அந்த மூன்று மனிதர்களையும் தான்.


Friday, August 12, 2011

சுதந்திரம் - குடும்பத்தலைவியின் பார்வையில்

"அம்மா ஸ்கூல்க்கு லேட் ஆய்டுச்சி. என்ன பண்ணிட்டுருக்க? எனக்கு பெல்ட் தேடி எடுத்துக்கொடு", நான்காவது படிக்கும் வருண்.

"அம்மா என் ரிப்பன் பாத்தியாம்மா.. இன்னிக்கி வைட் ரிப்பன் கட்டிட்டு போனும். தேடி கொடேன்" இது ஆறாவது படிக்கும் வனிதா.

வருண், வனிதா இருவரும் லாவண்யாவின் குழந்தைகள். லாவண்யாவும், விமலும் திருமணம் செய்து கொண்டு 13 வருடங்கள் ஆகி விட்டன. லாவண்யா தமிழ் பெண். விமல் ஆந்திராவை சேர்ந்தவன். லாவண்யா குடும்ப பொறுப்பு காரணமாக வேலையை ராஜினாமா செய்து 11 வருடங்கள் ஆகி விட்டது.

வருண் "அம்மா இன்னிக்கி ஸ்கூல்ல இண்டீபென்டென்ஸ் டே மா.. எனக்கும் அக்காக்கும் வந்தே மாதரம் பாரதியார் பாட்டு சொல்லி கொடுத்தல மா அது mp3 பிளேயர்ல ரெகார்ட் பண்ணி கொடும்மா. ஸ்கூல் போறப்போ கேட்டுட்டே போன பாட ஈஸியா இருக்கும்."

"ஆமாம்மா ரெகார்ட் பண்ணி கொடும்மா" ஒத்து ஊதினால் வனிதா.

"அட போங்கடா அவ்ளோ வேலை இருக்கு வீட்டுல, ஞாபகம் இருக்கற வரைக்கும் பாடு எல்லாம் போதும்" சலித்து கொண்டே ரிப்பனை வனிதா கையில் திணித்து, "நீயே கட்டிக்கோ, நான் பெல்ட் தேடனும்" என்று போய்விட்டாள். ஒரு வழியாக பசங்களை ஸ்கூல்க்கு அனுப்பி விட்டு, டிவி ஆன் செய்தாள். மனம் தொலைகாட்சி பெட்டியில் லயிக்காது போகவே, ஓய்வெடுக்க சோபாவில் படுத்துகொண்டாள்.

"ச இப்போன்னு பாத்து விமல் வேற இல்லை. ரொம்ப முக்கியமா இந்த ஆன்-சைட் இப்போ. ஏன்தான் இப்படி இருக்கானோ, கொஞ்சம் கூட குடும்ப பொறுப்பே இல்லாம" என்று நினைத்த லாவண்யாவின் மனம் கிடு கிடுவென அவள் பால்யத்திற்கு சென்றது.

14 வருடங்களுக்கு முன்...

சுதந்திர தின இசை கச்சேரியில் லாவண்யாவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என்ற பாரதியாரின் பாடலுடன் கச்சேரி ஆரம்பித்தது. இவள் "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர், வாழிய பாரத" என்று பாட ஆரம்பித்தவுடன், ஒருவன் கூட்டத்தில் இருந்து "தமிழர் மட்டும் வாழ்ந்தால் போதுமா, பாரதம் வாழுமா?" என்று தகராறு செய்தான். கூட்டத்தினர் கூச்சலிட கச்சேரி நிறுத்தப்பட்டது. லாவண்யா குளமான விழிகளுடன் வீடு திரும்பினாள்.

அடுத்த மாதம் இவள் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள். முதல் நாள் பார்மாலிடீஸ் முடிந்தவுடன் தனது சீட்டிற்கு திரும்பினாள். பக்கத்துக்கு இருக்கை ஆசாமி இவளையே பார்ப்பது போல ஒரு மாய எண்ணம். வீட்டிற்கு செல்லும் பொழுதும் பக்கத்து இருக்கை ஆசாமி தொடர்வது போல் ஒரு நினைப்பு. அவள் நிழலாய் அவன் மாறிவிட்டதாய் ஒரு உள்ளுணர்வு சொல்லியது.

"என்னங்க என்ன பிரச்சனை உங்களுக்கு? என் பின்னாடியே வரீங்க?" என்று ஒரு நாள் கேட்டே விட்டாள்.

"ஒண்ணுமில்லை உங்கள்ட சாரி சொல்லணும்" என்றான் அந்த ஆசாமி.

"நீங்க யாரு எதுக்கு சாரி சொல்லணும்?" மனதிற்குள் அவனை லூசு என்று நினைத்துக்கொண்டே கேட்டாள்.

"நான் விமல். ஒரு மாசம் முன்னாடி உங்க கச்சேரில தகறாரு பண்ணினது நான் தான். அன்னிக்கி எனக்கு ஒரு மூட் அப்செட். அதான் அப்படி நடந்துகுட்டேன். சாரி", என்றான் விமல். ஒரு முறைப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் லாவண்யா. அன்று முதல் இன்று வரை அவனது மூட் அப்செட்களை சுதந்திரமாய் அனுபவித்து வருகிறாள்.

ஒருவரை நமக்கு பிடித்து போனால் அவர்களிடமே நாம் வம்பிழுக்கிறோம். அவர்களை நம் வழிக்கு வரவைக்க முயற்சிக்கிறோம். இது போன்ற உணர்ச்சிகளே காதலாகிறது அல்லது நட்பாகிறது (ஒரே பாலினமாய் இருந்தால்). சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஊடலே காதலாகிறது. இவர்கள் விஷயமும் அப்படியே.

காதல் என்ற செடியை இருவரும் தண்ணீர் ஊற்றி வளர்க்க அது விருக்ஷமாகி, இருவரது பெற்றோர்களுக்கும் தனது கசப்பான கனியை பரிசளித்தது. தங்களது சுதந்திரத்தை பயன்படுத்தி (!!!) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் அவள் பெற்றோர் வீட்டிற்கு சென்று வரும் சுதந்திரத்தை கூட அவர்கள் பெற்றோர் மறுத்தனர்.

குழந்தைகள் பிறந்த பின் தான் விருப்பத்துடன் பார்த்து வந்த வேலையை சுதந்திரமாய் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. பிடித்த விஷயங்களான கச்சேரி பாடுவது கூட சுதந்திரமாய் நின்று போனது. காலையில் குழந்தைக்கு பாடல் ரெகார்ட் செய்து கொடுக்க குட முடியாத அளவு ஒரு டிஜெக்சன்.

நான்கு நாட்கள் முன், "விமல், பொண்ணுக்கு அரங்கேற்ற கச்சேரி வெக்கலாம் டா, ஸ்கூல் டீச்சர் அவ லாஸ்ட் அனுவல் டேக்கு பாடினது நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க" என்று கணவனிடம் சொன்ன பொழுது, "நீ பாடி என்னத்த பண்ணின. அவ நல்லா படிக்கட்டும் போதும்" என்றான். அவளுக்கு கிடைத்த இரு சிஷ்யர்களில் ஒருவருக்கு அரங்கேற்றம் செய்யும் சுதந்திரமும் போனது.

வெளிப்பார்வைக்கு நிறைவான வசதி, அழகான குழந்தைகள் என்று அழகாகவும், உள்ளே இருக்கும் ஏக்கத்தினால் வாடி வதங்கும் தனது நிலையை எண்ணி தம்புராவை மீட்டி "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே.. நீங்களெல்லாம் சொப்பனம் தானோ, வெறும் அற்ப மாயைகளோ" என்று பாடலானாள்.

Monday, August 8, 2011

ட்ரிங் ட்ரிங்

குறிப்பு: இந்த படைப்பு ப்ரோமோசன் என்ற பெயரில் "அதீதம்" என்ற இணைய இதழின் ஜூன் மாத பதிப்பில் வெளியாகியுள்ளது. இந்த கதையை அதீதம் இதழில் படிக்க இங்கே சொடுக்கவும்.

டிர்ர்ரிங் ட்ரிங்...

வினோத் கால் அட்டென்ட் செய்ததும் "நாங்க HDFC லேந்து பேசுறோம். உங்களுக்கு upto 3 லாக் ரெடி லோன் sanction ஆகி இருக்கு. இது பர்சனல் லோன் நீங்க எதுக்கு வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்...." என்று மூச்சு விடாமல் பேசினாள் ஒரு பெண். வினோத்திற்கு கோபம் மூக்கு அல்ல நெற்றிக்கு மேல் வந்தது. "ஏங்க உங்களுக்குலாம் ஒரு தடவ சொன்ன மண்டைல உறைக்காதா? எவ்ளோ டைம் உங்க பேங்க் லேந்து போன் பண்ணுவீங்க"

போன் குரல் "சார் சாரி. உங்க நல்லதுக்கு தான சார் லோன் தரோம்.. நீங்க இந்த லோன் அமௌன்ட் வெச்சு என்ன வேணாலும் பண்ணலாமே சார்". "என்ன நல்லது. நீங்களும் உங்க லோனும். இனொரு டைம் கால் பண்ணினீங்கன்னா நடக்கறதே வேற" இது வினோத்.

"வீடு தேடி வந்து லோன் கொடுத்தா கசக்கத்தான் சார் செய்யும்.. நீங்களா போயி சேட்டு கடைல அடமானம் வெச்சு கைல கால்ல விழுந்து பணத்துக்கு அல்லாடும் பொது தான் சார் தெரியும். சும்மா பிகு பண்ணிகாதீங்க சார்." சற்று கடுமையாகவே அந்த பெண் பேசினாள்.

வினோதிற்கு அவன் பிரமோசன் இண்டர்வியுவிற்கு நேரமாகி கொண்டிருந்தது. அந்த கடுப்பில் "சாரி ஐ ஆம் நாட் interested" என்றான். அந்த கால் சென்ட்டர் பெண்மணி விடாமல் "இல்ல சார் நாங்க கம்மியான interest லோன் தரோம் இப்படி interest இல்லைன்னு சொன்னா எப்படி சார்"

"ஏண்டி உன் டார்கெட் ரீச் பண்றதுக்கு ஏன் என் தாலி அறுக்கற....." என்று ஆரம்பித்து கடுமையான வார்த்தைகளை கொட்டினான் வினோத். "ஹலோ மிஸ்டர்.. சாரி உங்க பேரு என்ன. கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாருக்கும்." என்றாள் கால் சென்ட்டர் பெண்.

"ஓஹோ என் பேரு கூட தெரியாமதான் எனக்கு கால் பண்ணி லோன் தரேன்னு சொன்னியா.. என்கேந்துடி உங்களுக்கு நம்பர் மட்டும் கிடைக்குது. கால் சென்ட்டர் பேருல கடலை போட்டுட்டு சுத்துறீங்களா? ..." என்று தனது இரண்டாவது சுற்று வசை மொழியை ஆரம்பித்தான். மணி மதியம் 2 ஆகவே நேரமாகி விட்டதை உணர்ந்து தொடர்பை துண்டித்தான். அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிரமோசன் இண்டர்வியு கால் வரும் வழியாய் தெரியவில்லை. எனவே மதிய உணவிற்கு சென்றான்.

வினோத்தின் மனமெல்லாம் இண்டர்வியு பற்றியே இருந்தது. கிட்ட தட்ட மூன்று வருடங்களாய் ஏர்டெல் கால் சென்டரில் வேலை. அப்போது இப்போது என்று தட்டி கழிந்து வந்த பிரமோசன் இப்பொது வருவதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக இவனது டீம் லீடர் சென்ற வாரம் கூறி இருந்தார். ஏதோ பெயருக்கு சாப்பிட்டு தனது சீட்டிற்கு சென்றான். பிரமோசன் கால் ஒன்று மணியிலிருந்து இரண்டு மணிக்குள் வரும் என்று வந்திருந்த மெயிலை இன்னொரு முறை சரி பார்த்துக்கொண்டான்.

மணி இரண்டரை ஆகவும் வினோத்தின் மனம் மிகவும் கலவரமடைந்தது.

பக்கத்துக்கு சீட் பிரபாகர் திடீரென்று துள்ளி குதித்தான். இவன் அருகில் வந்து "மச்சான் எனக்கு டீம் லீடா பிரமோசன் கிடசுருச்சி டா" என்று இவனை கட்டி பிடித்தான். "மச்சா உன் ரிசல்ட் என்னாச்சி டா"

"எனக்கு இன்னும் இண்டர்வியு காலே வரலடா மச்சான்"

"மாப்ள எனக்கும் இண்டர்வியு கால் வரல டா ஆனா ப்ரோமோசன் கிடசுருச்சினு மெயில் வந்துடுச்சி டா"

"என்னடா உளறுற.."

"நா உளறல. நீ போயி உனோட மெயில் செக் பண்ணு. உனக்கும் பிரமோசன் வந்துருக்கும் டா மாப்ள"

வினோதிற்கும் ஒரு மெயில் வந்திருந்தது:

sub: Promotion Interview

Hi Vinoth,

We regret to inform that you have not cleared the promotion interview. We praise your hard-work, punctuality, despite all these we cannot give you promotion due to யுவர் lack of patience. We expect you to continue your good work so that you may get the things cleared in the next try.

All the best and we are sorry once again.

With Regards,
Airtel HR Manager.

"நான் பிரமோசன் கால்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ கார் லோன் சான்க்சென் பண்ணிருக்கோம்னு ஒரு கால் வந்துச்சி, நான் டீடைல்ஸ் கேட்டுட்டு சாரி கார் வாங்குற அளவுக்கு வசதி இல்லனு சொன்னேன். தொன தொன னு பேசினாங்க; நா திருப்பி சாரி னு சொல்லிட்டு போன வெச்சிட்டேன் டா மாப்ள.." என்றான் பிரபாகர்.

வினோதிற்கு மெல்ல மெல்ல விஷயங்கள் புரிய ஆரம்பித்தபோது மறுபடியும் "டிர்ர்ரிங் ட்ரிங்...". இந்த முறை நிஜமாகவே HDFC இல் இருந்து கால் வந்தது.



Sunday, July 24, 2011

சாப்ட்வேர் சன்யாசிகள் - 2

ஒவ்வொரு வேலை செய்வோருக்கும் தவிர்க்க முடியாத செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன. சாப்ட்வேர் மக்களுக்கு செலவினங்கள் இன்னும் அதிகம். சிக்கனமாய் இருந்தால் வேலைக்கு ஆகாது. ஏன் வீடு வாடகைக்கு விடுவோர் கூட சாப்ட்வேர் மக்கள் என்றால் வாடகை பன்மடங்கு உயர்த்தியே கூறுகின்றனர். வாங்கும் சம்பளம் வரிக்கும் வாடகைக்குமே போய் விடும்.
சாப்ட்வேர் மக்களும் கடன் வாங்குகின்றனர், படித்த கடன், படிப்பதற்கு கடன், வீட்டு கடன், வாகனக்கடன் என்று. அந்த கடன்கள் ரத்து செய்யப்படுவதில்லை,  வட்டியுடன் அடைக்கப்படுகிறது. (நாங்கள் ரத்து செய்யுங்கள் என்று கேட்பதும் இல்லை)

அரசாங்கங்கள் விவசாயக்கடனை ரத்து செய்கிறது. அனால் 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவரின் விவசாயக்கடனை ரத்து செய்வது முட்டாள் தனமல்லவா? சாப்ட்வேரின் தேக்கநிலையின் (recession) சமயத்தில், பலர் வேலை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். பலர் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அப்போது யார் என்ன செய்தீர்கள்? நீங்கள் இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என்று கேட்கவில்லை. நாங்கள் கட்டும் வருமான வரியால்தான், இதர மறைமுக வரிகளால்தான், அரசியல்வாதிகள் சுரண்டி தின்க முடிகிறது, இலவசங்களை மக்கள் பெற முடிகிறது என்பதை சிறிதாயினும் உணர்ந்தால் அதுவே போதும்.

ஒரு திரைப்படம் ஒன்று பார்க்க நேர்ந்தது. பெரும்பாலான மக்கள் நன்றாக இருக்கிறது, அருமை என்று கூறிய படம். "தமிழ் M.A.". படத்தில் தமிழ் படித்த ஒருவர் வாழ்க்கையில் கஷ்டப்படுவது போலவும், இந்த சாப்ட்வேர், கால் சென்டர்களில் வேலை செய்வோர் எல்லாம் சந்தோஷமாக வாழ்வது போலவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. சாப்ட்வேர் மக்களாலா தமிழ் படித்தோர் கஷ்டப்படுகின்றனர்? இந்த உலகத்தில் வாழவா வழி இல்லை? அடுத்தவன் வாழ்கையை பார்த்து வயித்தெரிச்சல் படுவதுதான் படித்த தமிழுக்கு அழகா?

சமுதாயத்தில் ஏற்றதாழ்வுகள் இன்று அதிகரித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அனால் அதற்க்கு ஐ.டீ மக்கள் எவ்விதத்திலும் காரணம் இல்லை என்பதும் உண்மை. கொஞ்சம் யோசித்தால் இந்த உண்மை தன்னால் விளங்கும். அடுத்த வீட்டை பார்த்து பொறாமை பட்டது சமுதாயத்தின் தவறல்லவா?

ஒரு பெண்மணி கவர்ச்சியான ஒரு வசனம் எழுதிய டீ-ஷர்டை அணிந்து இருப்பார். படத்தின் கதா நாயகன் (அவனை இவ்வாறு அழைப்பது பொருந்துமா என்று தெரியவில்லை!!!) அந்த வசனத்தை படித்து விட்டு, அந்த பெண்ணின் மார்பகங்களை பிடிப்பார். "ஐ டார்" (எனக்கு தைரியம் உள்ளது) என்றும் கூறுவார். இதுவா தைரியம்? இப்படி செய்ததன் பின்விளைவை அவன் எதிர்கொள்வதை காட்டியிருந்தால் ஒரு வேளை அந்த கதா நாயகனையும், இயக்குனரையும் பாராட்டலாம்.

"அப்போ பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிந்து வெளியே வரலாமா?" என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம், வரலாம், வருவார்கள். நீங்கள் "ஐ டார்" என்று திரைப்படங்களில் வேண்டுமானால் செய்யலாம், நிஜத்தில் செய்தால், மூஞ்சி, மொகரை பெயரும். இன்னொரு சினிமா வசனம், "என்ன பொருத்தவரைக்கும் சப்பையும் ஒரு ஆம்பள தான், எல்லா ஆம்பளைங்களும் சப்பை தான்". இதை எழுதிய வசனகர்த்தாவிற்கு ஒரு சபாஷ். இதற்கும் சாப்ட்வேருக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. சாப்ட்வேர் துறை ஆண்களை சாப்டாகவும் சப்பையாகவும் ஆக்கி விட்டது.

எப்படி? அடுத்த சந்நியாசத்தில் பார்ப்போம்.

(சந்நியாசம் தொடரும்..) 

Tuesday, July 12, 2011

சங்கீதச் சாரல் - 1

ராகம்: தோடி
தாளம்: ரூபகம்

பல்லவி:

ஆடும் சிதம்பரேசா ஆலவாயுறை சோமேசா
தஞ்சை வளர் ப்ருஹதீசா தயைகூர்ந்து அருள்புரிவாய்

அனுபல்லவி:

அருவமாய் அருமருந்தாய் ஆருயிராய் அகிலமுமாய் 
அம்பலத்திலும் ஏழை வேங்கடேசன் உள்ளத்திலும் (ஆடும்)

சரணம்:

அன்புடன் உனை நினைந்து அத்வைத இன்பம் கொண்டு
ஆதாரம் நீயென்று அடிமலரை நிதம் பணியும்
அடியாரவர் மனமதனில் அதியத்புத நடனமிட்டு
அல்லல்களை தீர்த்தோம் தீர்த்தோம் தீர்த்தோம் ஆனந்தம் தந்தோம் தந்தோம் என்று (ஆடும்)

Sunday, July 3, 2011

கூகிள் பிளஸ் - 3

ஏரிக்கரையில் சொரிமுத்து வருவதற்கு முன்னரே, குப்புசாமியும் மாயாண்டியும் வந்திருந்தனர். சொரிமுத்து கையில் ஒரு லேப்டாப் டேட்டா கார்ட் சகிதமாய் வந்தார். "என்னய்யா டெமோ காட்ட போறியா, லேப்டாப் சகிதமா வந்துருக்கடே" என்று வினவினார் மாயாண்டி.

சொறி: இல்லையா விவசாயம் பத்தி இன்னிக்கி ஒரு லைவ் கான்பரன்ஸ் இருக்கு. அத ரெகார்ட் பண்ணிகிட்டே உங்கள்ட பேசலாம்னு தான் லாப்டாப்போட வந்தேன்.

மாயா: அப்டியே எங்களுக்கு அந்த கூகிள் பிளஸ் எப்படி இருக்கும்னு காட்டுய்யா..

சொரிமுத்து கூகிள் பிளஸ் டெமோ வீடியோ ஓட்டினார். நாமளும் பாப்போமா?


சொறி: இதுல நிறைய நல்ல விஷயம் இருக்கு. தேவை இல்லாத குப்பை அப்ஸ் கிடையாது. அதுனால ஸ்பாம் ரொம்ப கம்மியா இருக்கும். நண்பர்களை சரியா அந்தந்த வட்டத்துல வெச்சிகிட்டோம்னா அந்த நண்பர் வட்டத்தோட மட்டும் விஷயங்களை பகிர்ந்துக்கலாம்.கூகிள் பஸ்னு ஒன்னு இருக்கு. அத இதுகூட லிங்க் பண்ணிக்கலாம். இன்னும் ட்விட்டர் ஏன் பேஸ்புக்கோட கூட லிங்க் பண்ணிக்கலாம்.

ஹாங் அவுட்னு ஒரு வசதி இருக்கு. நிறைய பேரு கூட ஒன்னா வீடியோ சாட் பண்ணலாம். நண்பர்கள் பகிர்ந்துகொள்ற விஷயம் பிடிச்சு இருந்தா +1 போடலாம். இது கிட்ட தட்ட பேச்புக்கோட லைக் மாதிரிதான். -1 கொடுத்துருந்தா நல்ல இருந்துருக்கும்.

நம்மளோட நண்பர்கள் பகிர்ந்துகொள்ற போடோக்கள பாக்கலாம். நம்ம பிக்காசோல போட்டு இருக்கற போடோக்கள பகிர்ந்துக்கலாம். சோசியல் நெட்வொர்க்ல இருக்கற எல்லா வசதிகளுமே கொஞ்சம் அழகா மாற்றம் செய்யப்பட்டு இதுல இருக்கு. ஆனா ஒரு விஷயம் நிறைய பேரு பக் இருக்குன்னு சொல்றாங்க. இன்விடேசன் அனுப்ப முடிலன்னு சொல்றாங்க. நண்பர்கள் வரலன்ன, கூட்டம் இருக்காது, மக்களும் உபயோகிக்க மாட்டாங்க. அதுனால கூகிள் சீக்கிரமா இதோட ஹைப் குறையறத்துக்கு முன்னாடி எல்லா விஷயங்களையும் சரி பண்ணனும்.

குப்புசாமி: சரிடே. எனக்கு ஒரு இன்விடேசன் அனுப்புடே. நானும் கூகிள் பிளஸ் உபயோகிக்கறேன்.

சொறி: அடப்போடே. நானே யாருக்கும் இன்விடேசன் அனுப்ப முடிலன்னு கடுப்புல இருக்கேன். கூகிள்கு ரிப்போர்ட் பண்ணி இருக்கேன். சரி ஆனா அனுப்பறேன். அவங்க சரி பண்ணலைனா கூகிள் வேவ் மாதிரி எபிக் சொதப்பல் ஆகிடும். பொறுத்து இருந்து பாப்போம்டே. சரி இருட்டிடுட்டு வருது. வூட்டுக்கு போவோம். ராத்திரி ஸ்கைப்ல வாடே அரட்ட அடிக்கலாம் மக்கா..

குப்பு, மாயா: சரிடே, நைட் ஸ்கைப்ல பிங் பண்றோம் கான்பரன்ஸ்ல அரட்டை அடிக்கலாம். என்னதான் சோசியல் நெட்வொர்க் வந்தாலும் இந்த ஸ்கைப்போட கால் க்வாலிட்டி அடிச்சுக்க முடியாதுடே.. 

சொரிமுத்து: ஸ்கைப் கால் நம்மள மாதிரி தண்டப்பயலுவலுக்கு ஒசில பேசிக்க கிடைச்ச வரப்ப்ரசாதம்டே.

நண்பர்கள் விடை பெற்றனர். நம்மளும் கூகிள் பிளஸ் பதிவு முடிச்சுக்குவோமா? பதிவை படிச்ச, கமெண்ட் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.
நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...